டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைந்து குணம் அடைய விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், மிதமான கட்டுப்பாடுகள் பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனை பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அவர் கடந்த 2018 இல் பிரதமராக தேர்வாகி இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் உள்ள பிரதமருக்கே கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை எண்ணி பாகிஸ்தான் மக்கள் கவலை கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்ட இரண்டு தினங்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இம்ரான் கான் விரைவில் உடல் நலம் பெற விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.