×

நெல்லை அருகே ஒருதலை காதல் விவகாரம்: 8 மாத குழந்தை வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் 8 மாத குழந்தையை வெட்டி கொலை செய்துவிட்டு அவரது தாத்தா, பாட்டியை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் ரசல்ராஜ் என்பவர் பாஸ்டராகவும் சர்ச்சுடன் சேர்ந்த வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். அவருடைய மூத்த மகள் ஏஞ்சலின் நல்லதாம். அவருக்கு திருமணமாகி 8 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. ஏஞ்சலின் நல்லதாம் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அந்த 8 மாத குழந்தையான அக்ஷயா குயினை தாத்தா, பாட்டியிடம் விட்டுவிட்டு அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் இவருடைய கடைசி மகள் ஏஞ்சலினை திருமணம் செய்ய கேட்டு பழங்குடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவசங்கரன் என்கிற ஆட்டோ டிரைவர் பெண் கேட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் 20 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. இதன்பிறகு ரசல்ராஜ் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் கேன் மற்றும் அரிவாளுடன் ரசல்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் ரசல்ராஜ் வீட்டில் இல்லை. நடைப்பயிற்சி சென்றுவிட்டார். அப்போது உள்ளே நுழைந்த சிவசங்கரன் ரசல்ராஜின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

எனக்கு பெண் தருகிறீர்களா அல்லது உங்கள் வீட்டை கொளுத்தட்டுமா அல்லது அரிவாளால் வெட்டிவிடுவதாக தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் வாக்குவாதம் முற்றி ரசல்ராஜின் மனைவியை சிவசங்கரன் வெட்ட முயன்றுள்ளார். அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த 8 மாத குழந்தை அக்ஷயா குயின் மீது அரிவாள் வெட்டு விழுந்து பலமான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அக்ஷயா குயின் என்ற 8 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. மீண்டும் வெறிகொண்ட சிவசங்கரன் ரசல்ராஜின் மனைவியையும் கழுத்தில் வெட்டியுள்ளார். இந்த நேரத்தில் ரசல்ராஜின் இன்னொரு மகள் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் பூட்டிக்கொண்டதால் அவர் உயிர் தப்பினார். அலறல் சத்தம் ரசல்ராஜ் வெளியில் இருந்து ஓடி வரவே சிவசங்கரன் அவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் சிவசங்கரனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரே காயம் ஏற்படுத்திக்கொண்டாரா அல்லது ரசல்ராஜ் அவரை தாக்கி காயம் ஏற்படுத்தினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nellai , Murder
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!