சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (இன்று) வேளச்சேரியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளேன். ஏப்ரல் 3ம் தேதி மதுரையில் பிரசாரம் முடிவடைகிறது. இந்த பிரசாரத்தில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அவரவர்களுக்கு எங்கு வாய்ப்பிருக்கிறதோ அங்கு பிரசாரம் செய்வார்கள்.
இந்த தேர்தலில் முக்கியமான நோக்கம் தமிழகத்தை தமிழகம் ஆளும். திமுக தலைமையில் ஆட்சி அமையும். மு.க.ஸ்டாலின் முதல்வராவார். கூட்டணி கட்சிகள் துணை நிற்கும். இல்லை என்று சொன்னால், தமிழகத்தை பாஜதான் ஆளும். அதிமுகவால் ஆள முடியாது. பாஜவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக சொல்கிறார். அது தவறு. 234 தொகுதியும் பாஜ தொகுதிதான். மத்திய அரசு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிறார்கள். பல்வேறு மொழி, கலாச்சாரம் உள்ள ஒரு நாடு. இதை அகற்ற வேண்டும் என்று பாஜ முயற்சிக்கிறது. அதற்கு ஒரு வகையில் அதிமுக அரசு துணை போகிறது.
சமஸ்கிருதத்துக்கு ரூ.300 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளனர். ஆனால், செம்மொழியான தமிழுக்கு ஒதுக்கியிருப்பது மிக மிக குறைவு. இதை அதிமுக அரசு தான் தட்டி கேட்ட முடியும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.காரணம், அவர்கள் மீது பல்வேறு விசாரணைகள் இருக்கிறது. அதற்கு அஞ்சி அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதே கிடையாது. மத்திய அரசு அதிமுகவினர் நாங்குநேரி இடைத்தேர்தலில், ஒவ்வொரு தெருமுனையில் இருந்து கொண்டு பணம் பட்டுவாடா செய்தார்கள். நான் கண்ணால் பார்த்தேன். அதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.