×

சென்னை தி.நகரில் தனியார் பள்ளி மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு!: பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்..!!

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மூடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று பாதிப்பால் தமிழகத்தில் உள்ள அநேக பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் அவலம் நீடித்து வருகிறது. கடந்த 1 வருடமாக பள்ளிகள் திறக்காததால் வருமானம் இல்லாமல் அந்த நிர்வாகங்கள் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் மூடப்படும் என்றும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனியார் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி பள்ளியை மூடுவதாக அறிவித்துள்ளதால் மாணவர்களின் கல்வி பாழாகிவிடும் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கொரோனா காரணமாக வேலையிழந்து வட்டிக்கு பணம்பெற்று கல்வி கட்டணம் செலுத்தியதாகவும், ஓராண்டுக்கு கட்டணம் செலுத்திய நிலையில், திடீரென்று புதிய பள்ளியில் எப்படி சேர்க்க முடியும் என்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கொரோனா தொற்றால் வருமானமே இன்றி தவித்து வரும் நிலையில் டொனேஷன் கொடுத்து எப்படி பள்ளியில் சேர்க்க முடியும் எனவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகளை தொடர்புகொண்ட போது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.


Tags : Chennai , Chennai, school, closure, parents, siege
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...