திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்டது விவேகானந்தா நகர். நகரின் மத்தியில் திருச்சி சாலை அருகே அமைந்துள்ள இப்பகுதியில் தொழிலதிபர்கள் அதிகம் இருப்பதால் இப்பகுதியை விஐபி நகர் என்றும் அழைப்பர். இப்பகுதியில் சமீபகாலமாக குப்பை கழிவுகள், பழைய பொருட்கள், பயன்படுத்திய பஞ்சு மெத்தைகள் உள்ளிட்டவற்றை கொட்டி குவித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் மூக்கை பிடித்து கொண்டே செல்லும் நிலை உள்ளது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட தெருக்கள், கடைவீதிகளில் சேகரமாகும் குப்பைகளை ஒரே இடத்தில் குவித்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் விவேகானந்தா நகரில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.