தாம்பரம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேற்று பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் வழியெங்கிலும் நின்று மலர்தூவி, ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொது மக்களிடம் பேசிய அவர், ‘‘பல்லாவரம் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு பணிகள் நடைபெற்று இருக்கிறது. மேலும் பெண்களுக்காக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை, வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள், கர்ப்பிணிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வாஷிங்மெஷின், சூரியசக்தி சமையல் அடுப்பு, வீடுதேடி ரேஷன் பொருள் என பெண்களுக்கு மட்டும் பல திட்டங்கள் உள்ளது. இந்த திட்டங்களை உங்களுக்கு பெற்று தருவேன். பொழிச்சலூர் பகுதியில் மக்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும் அதனை உடனுக்குடன் செய்து தருவேன். எனவே, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’’ என்றார். பிரசாரத்தின் போது கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.