கோலார்: போலீசார் இரவு-பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு வருவதால், சமூகத்தில் அமைதி நிலவி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று மத்திய மண்டல போலீஸ் ஐஜிபி சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்தார். கோலார் மாவட்ட போலீஸ் துறை சார்பில் விளையாட்டு போட்டியின் நிறைவு விழா நடந்தது. இதில் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி அவர் பேசும்போது, போலீஸ் துறையில் பணியாற்றுவோர் சற்று இளைப்பாறும் வகையில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளது.
அரசு துறையில் எத்தனை பணிகள் இருந்தாலும் நமது பணிக்கு இருக்கும் கடமை வேறு பணிக்கு இல்லை. ஒட்டு மொத்த மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு போலீசார் எடுத்து கொள்ளும் சிரமம், கடமை, பொறுப்பு தான் காரணம். மாநில போலீஸ் துறையில் ஆயிரக்கணக்கான பணியிடம் காலியாகவுள்ளது. குறைவான போலீஸ் பலமிருந்தும் நிறைவான பணியை மேற்கொள்கிறோம். பொதுமக்கள் போலீசாருடன் ஒத்துழைத்தால், சமூக குற்றங்களை முழுமையாக ஒழிக்க முடியும். பொது அமைதியை சீர்குலைப்பவர்கள் தங்கள் வீட்டில் இருந்தாலும் உறவுகளை பார்க்காமல் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற மன பக்குவத்திற்கு மக்கள் வர வேண்டும்.
சமூகத்தில் பல வழிகளில் வஞ்சிக்கப்படும் பொதுமக்கள் நியாயம் கிடைக்கும் என்று நம்பி வருவது போலீஸ் நிலையம் மட்டுமே. இங்கு ஏழை-பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் உண்மையின் பக்கம் நீங்கள் செயல்பட வேண்டும். பணம், அரசியல் போன்றவைக்கு அடிபணியாமல் நியாயத்திற்கு மட்டும் அடிப்பணிய வேண்டும். நாம் நிமிர்ந்து நின்றால், குற்றங்கள் மாயமாகிவிடும்’’ என்றார்.