கோலார்: எச்ஐவி நோயாளி பாதிக்கப்பட்டவர்களை சமூகம் மிகவும் கீழ்தரமாக பார்க்கும் போக்கை கைவிட்டு, அவர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்.செல்வமணி ஆலோசனை வழங்கினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ``சமூகத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சிலர் எச்ஐவி ேநாயால் பாதிக்கப்படுகிறார்கள். கோலார் மாவட்டத்தில் 2020-21ம் நிதியாண்டில் 46,221 பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 244 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் 27,951 கர்ப்பிணிகளிடம் நடத்திய பரிசோதனையில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 20 குழந்தைகளுக்கு நடத்திய பரிசோதனையில் ஒரு குழந்தைக்கு உறுதி செய்யப்பட்டது.
ஏஆர்டி மையத்தில் 9,261 புகார்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் 1,490 புகார்கள் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் 7,771 எச்ஐவி புகார்கள் உள்ளது. கர்ப்பிணிகள் கட்டாயம் எச்ஐவி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து கடந்த 16ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் 225 கிராமங்களில் உள்ள 54,978 வீடுகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீதி நாடகங்கள் நடந்து வருகிறது. கலைஞர்கள் ஆடல், பாடல், நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனிடையில் நாளை (இன்று) முதல் இரண்டு நாட்கள் மாவட்டத்தில் ஒவ்வொரு வீடாக சென்று எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்வதுடன் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முகாம் நடத்தப்படுகிறது. மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை கேலி பேசுவது, ஒதுக்கி வைப்பது சட்டப்படி குற்றமாகும். அத்தகைய தவறுகளை யாரும் செய்யாமல், அவர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும்’’ என்றார்.