அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சட்டமன்ற தொகுதியில் அதிகளவில் நெசவாளர்கள் உள்ளதால் நெசவு பூங்கா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே போல் திருத்தணி நகராட்சியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. முருகன் கோயில் ராஜகோபுரம் பணிகள், கடந்த, திமுக ஆட்சியில் துவங்கப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. முருகன் மலைக்கோவிலில் இருந்து மேல் திருத்தணிக்கு இரண்டாவது மலைப் பாதை அமைப்பதற்கு திட்டமிட்டு பணிகள் துவங்கிய நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருத்தணியில் முருகன் கோயில் உள்ளதால் சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. ஆனால், அதற்காக அடிப்படை வசதிகள் குறைவாக தான் உள்ளது. அதே போல் திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டில் நோயாளிகள் வயிறு சம்மந்தமான நோய்களை கண்டறிய திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால், அங்கு அல்டரா சவுண்டு ஸ்கேனர் இல்லை. இதனால் நோய்கள் கண்டறிவதற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதே போல் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதியும் திருத்தணி அரசு மருத்துவமனையில் இல்லை. இதை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. இந்த தொகுதியில் அதிமுக எம்எல்ஏ இருந்தும் மக்கள் நலனில் போதிய அக்கறை காட்டவில்லை.