புதுடெல்லி: ‘இந்தியாவில் அடுத்த ஓராண்டில் சுங்கச்சாவடிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும்,’ என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். நாடு முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் மூலம், வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் முறைகேடுகள், அடிக்கடி மோதல்கள், போக்குவரத்து நெரிசல், தாமதம் போன்றவை ஏற்படுகின்றன. சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அதிக நேரம் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும், சுலபமான முறையில் சுங்க கட்டணத்தை வசூலிக்கவும் தற்போது பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், இப்போது 93 சதவீத வாகனங்களிடம் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இந்த சுங்கச்சாவடிகளை ஆக்கிரமித்துள்ளனர்.