×

ஜி.கே.வாசன் துரோகம் செய்துவிட்டார் தமாகாவில் இருந்து கூண்டோடு ராஜினாமா: துணைத் தலைவர் கோவை தங்கம் பரபரப்பு பேட்டி

கோவை: ஜி.கே.வாசன் துரோகம் செய்துவிட்டார், எனவே நானும் நிர்வாகிகளும் தமாகாவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்கிறோம் என  துணைத்தலைவர் கோவை தங்கம் பேட்டியளித்தார். கோவை தனியார் ஓட்டலில் தமாகா துணைத்தலைவர் கோவை தங்கம், வால்பாறை நிர்வாகிகள்  மற்றும் மாநில செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கோவை தங்கம் அளித்த பேட்டி: அதிமுகவுடன் கூட்டணி  பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. இதில், எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதைபோல் நாங்கள் சென்று அதிமுக கமிட்டியிடம் 12  சீட்கள் கேட்டோம். அவர்கள் பேசிவிட்டு, 6 தொகுதி தருவதாக கூறினர்.

கமிட்டியில் இருந்த எஸ்.பி.வேலுமணி இரட்டை இலை சின்னத்தில் என்னை நிற்க கூறினார். தாராபுரத்தில் போட்டியிட வலியுறுத்தினார். அதற்கு  நான் சம்மதிக்கவில்லை. ஜி.கே.வாசனிடம் நடந்ததை கூறினோம். அவர் தனியாக முதல்வரை பார்த்தார். அப்போதும், 6 சீட் தான் என கூறியுள்ளார்.  அப்போது, ஜி.கே.வாசனிடம் நான் சுயேச்சையாக நிற்கலாம் என என்னோடு சேர்ந்து 11 பேர் வலியுறுத்தினோம். அதை எங்கள் தலைவர்  கேட்கவில்லை.  ஓ.பன்னீர் செல்வம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருவிக நகர் தொகுதியில் நிற்க கூறினார். அதற்கும் நான்  ஒத்துக்கொள்ளவில்லை. வால்பாறையில்தான் நிற்க வேண்டும் என கூறினேன்.

இந்நிலையில், ஜி.கே.வாசன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். இதனால், எனக்கு வால்பாறை தொகுதி கிடைக்கவில்லை. அவர் என்னை  கைவிட்டுவிட்டார். இந்த தொகுதி எனக்கு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். நான் ஓட்டுக்கு காசு  தரமாட்டேன். அப்படிப்பட்ட வெற்றி எனக்கு தேவையில்லை. தற்போது உள்ள ஆட்சியில் கல்வித்துறை முதல் அனைத்து துறைகளிலும் ஊழல்தான்  இருக்கிறது. தமாகாவை வாங்கி கொடுத்தே நான்தான். என் 52 ஆண்டு அரசியல் வாழ்க்கையில், கடந்த 10 ஆண்டுகளில் தமாகாவில் இருந்தேன்.  ஜி.கே.வாசன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். என் நெஞ்சம் உடைந்து சொல்கிறேன் இந்த நிமிடம் முதல் அந்த கட்சியில் இருந்து ராஜினாமா  செய்கிறேன்.

அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பதவியையும் ராஜினாமா செய்கிறேன். என்னுடன் சேர்ந்து இளைஞரணி மாநில துணைத்தலைவர் அருண்  பிரகாஷ், மாநில செயலாளர்கள் பொன் ஆனந்தகுமார், சி.ஏ.ராஜ்குமார், ராஜன் உள்பட மாவட்ட, மாநில செயலாளர்கள் என அனைவரும் கூண்டோடு  ராஜினாமா செய்கிறோம். வால்பாறையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவில்லை. காசு கொடுக்காமல் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை  கொடுத்தால் பார்க்கலாம். ேகாவை மாவட்டத்தில் பணம் கொடுத்துதான் கட்சிகள் வெற்றி பெற போகிறது. தேர்தல் ஆணையம், கலெக்டர் முதல்  அனைத்து அதிகாரிகளையும் மாற்ற வேண்டும்.

அப்போதுதான் இங்கு தேர்தல் நேர்மையாக நடக்கும். வால்பாறை மக்களுக்காக நான் நிறைய செய்துள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலினும் அதற்கான  திட்டங்களை வகுத்து கொடுத்தார். அதனால், அவர் அழைத்து பணி கொடுத்தால் அதை செய்வேன். வால்பாறை மக்களுடன் பேசி நாளை என்  அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : GK Vasan ,Tamaga ,Vice President ,Coimbatore Gold , GK Vasan betrays Tamaga resigns: Vice President Coimbatore Gold
× RELATED ஜி.கே.வாசன் 2ம் கட்டமாக தென்மாவட்டங்களில் பிரசாரம்