சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள்தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்யும் இடங்களில் அதிக கூட்டம் கூடுவதுடன், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பலரும் பின்பற்றவில்லை. அரசியல் கட்சி தலைவர்களும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம்தான் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. பீகாரில் கொரோனா தொற்று அதிகம் இருந்த நிலையில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தி சாதனை படைக்கப்பட்டது. தேர்தல் காரணமாக கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு புதிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பின்பற்றினார்.
இந்நிலையில்தான் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பீகார் மாநில சுகாதார துறை செயலாளருடன் பேசினார். இதையடுத்து, பீகார் மாநிலத்தில் இருந்து சுதிர்குமார், ரோகிணி ஆகிய 2 சுகாதாரத்துறை அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. இவர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரிகள் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இது நடந்தது. அப்போது, பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது கடைபிடித்த நடைமுறையை தமிழகத்தில் பின்பற்ற முடிவு செய்துள்ளனர்.