புதுடெல்லி: டெல்லி தீயணைப்புத்துறை தலைவர் அதுல்கார்க்கிற்கு சிறந்த பொறியியல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது. டெல்லி தீயணைப்புத்துறை தலைவராக இருப்பவர் அதுல்கார்க். இவர் தற்போது உணவு விடுதிகள், மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் தீயணைப்பு பணி மற்றும் விழிப்புணர்வு பணி, எச்சரிக்கை ஆகியவற்றில் அதிக அளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி யுனெஸ்கோ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக இன்ஜினியரிங் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் சிறந்த பொறியியல் ஆளுமை விருது நேற்று அதுல்கார்க்கிற்கு வழங்கப்பட்டது. வழக்கமாக மார்ச் 4ம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படும். கொரோனா காரணமாக டெல்லியில் உள்ள இன்ஜினியரிங் நிறுவன அமைப்புகள் நேற்று அந்த விழாவை கொண்டாடின. அப்போது அவருக்கு விருது வழங்கப்பட்டது.