ஊட்டி: ஊட்டி மரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுமையான தோட்டக்கலை மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனின் போது, வர கூடிய சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு கோடை விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கோடை விழாவை நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அனைத்து பூங்காக்களிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு செய்யப்படுகிறது.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள மரவியல் பூங்காவிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர புல் தளங்களும் வெட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பூங்கா நகருக்கு வெளியே அமைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு அதிகம் தெரிவதில்லை. இதன் காரணமாக இங்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. புதுமண தம்பதிகள் வெட்டிங் போட்டோகிராப்பி எடுக்க மட்டுமே இங்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.