திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலில் பினராயி விஜயனை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என பி.சி.சாக்கோ அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் எம்.பி.யும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பி.சி.சாக்கோ தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மூத்த நிர்வாகி ராகுல் பட்டேல் மற்றும் சுக்ரியா சுலே எம்.பி. ஆகியோர் முன்னிலையில் பி.சி.சாக்கோ இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சாக்கோ, கேரளத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் பினராயி விஜயனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். இடது ஜனநாயக முன்னணிக்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும் சாக்கோ அறிவித்துள்ளார். செயல்பாட்டில் உள்ள மற்றும் இலக்கை நோக்கி பயணிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தாம் வந்து சேர்ந்துள்ளதாக சாக்கோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஒரு மாற்று தான் இன்றைய தேவை என்று குறிப்பிட்டு பேசிய பி.சி.சாக்கோ, அதற்கான முன்னெடுப்பை காங்கிரஸ் கட்சியில் யாரும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
உட்கட்சி பூசல் புகாரை கூறி சில நாட்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து வெளியேறிய பி.சி.சாக்கோ, முதலமைச்சர் பினராயி விஜயனை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருப்பது கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.