×

முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழுவை கலைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைப்பது சாத்தியமில்லை?’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ‘முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு பாதிப்பு வராமல் நடவடிக்கை எடுக்க. துணைக்குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் இணைந்து செயல்பட வேண்டும்,’ என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த துணைக்குழுவை எதிர்த்து, கேரளாவை சார்ந்த ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பதற்கே பிரதான கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டது. தற்போது, துணை குழுவும் கூடுதலாக உருவாக்கப்பட்டு உள்ளதால் கண்காணிப்பு குழுவுக்கான அதிகாரங்கள் பிரித்து கொடுக்கப்படுகிறது. அதனால், துணைக் குழுவை கலைக்க உத்தரவிட வேண்டும்,’ என கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும், 4 வாரத்தில் அதன் உயர்நிலை மேற்பார்வை குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், அணை பராமரிப்பு குறித்த அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும். மேலும், அணையின்  நீர்மட்டம் உள்ளிட்ட புள்ளி விவரங்களையும் 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதை மீறினால், மாநில தலைமைச் செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். துணைக்குழு இல்லாமல் எப்படி அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்? அது, சாத்தியம் இல்லை,’ என கூறி, வழக்கை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Mullaperiyar ,Supreme Court , Mullai Periyar Dam sub-committee cannot be dissolved: Supreme Court
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...