மைசூரு: பெண்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது சரியில்லை பெண்களாக பிறந்து வாழ்வதே சவாலாகியுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரோகிணிசிந்தூரி தெரிவித்தார். மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் ரோகிணிசிந்தூரி பேசியதாவது: கடந்த காலங்களில் பெண்கள் சமையல், வீடு, குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்தனர். ஆனால் தற்போது அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் உதவி முக்கியமாகவுள்ளது. இதற்கு முன் பெண்களுக்கு சிறிய வயதிலேயே திருமணம் செய்யப்பட்டது.
இதனால் அவர்கள் சமையல், வீடு, குடும்பம் நடத்துவது என்று தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால் காலம் மாற்றத்தில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. குடும்ப பெண்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர். இதனால் உடல், மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள யோகா, நடைபயிற்சி, தியானம், அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வதுடன் ஊட்டசத்து கொண்ட உணவு வகைகள் சாப்பிட வேண்டும் என்றார்.