திருவொற்றியூர்: செங்குன்றம் காந்தி நகரை சேர்ந்தவர் நீனா (29), திருநங்கை. இவர், நேற்று முன்தினம் இரவு மாதவரத்தில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் சென்றபோது, செல்போனில் அழைப்பு வந்ததால், மொபட்டை ஓரமாக நிறுத்திவிட்டு, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 மர்ம ஆசாமிகள், அவரிடம் பேச்சு கொடுப்பது, அவரது மொபட் பெட்டியில் இருந்த 1,500 ரூபாயை பறித்து சென்றனர். இது சம்பந்தமாக நீனா பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், மாத்தூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (21), ஹரிஹரன் (20), பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (23) ஆகிய மூவர், நீனாவிடம் பணம் பறித்து சென்றது தெரிந்தது. இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் மாதவரம் மற்றும் பால் பண்ணை காவல் நிலையத்தில் உள்ளதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 பைக் மற்றும் ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.