சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத பாஜ, அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும், தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும், நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை குறித்து திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், சாந்தன்,
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மற்றும் 39 இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதிகளையும் எவ்வித பாகுபாடும் காட்டாமல் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், ஏராளமான உருது ஆசிரியர்களை உருவாக்கிய சென்னை தாஹிர் சாகிப் தெருவில் செயல்பட்டு வந்த உருது ஆசிரியர் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும், தமிழ்நாடு வக்பு வாரிய சொத்துகள் பல்லாண்டுகளாக மீளாய்வு செய்யாமல் தொடர்ந்து வருகிறது. வக்பு வாரிய நிர்வாகம் சமீபமாக ஊழல் மயமாகி வருகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், வக்பு வாரிய கண்காணிப்பில் உள்ள சொத்துகளை முழுமையாக கள ஆய்வு செய்திடவும், வக்பு வாரிய மறுசீரமைப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் பெற்று அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.