சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக, தேமுதிக கூட்டணி அமைத்து அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது. 195 பேர் அமமுக சார்பில் தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பிடித்தது. இந்நிலையில், அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள 7 பேர் கொண்ட 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டார். அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதி - டாக்டர் பி.காளிதாஸ், அரக்கோணம் - கே.சி.மணிவண்ணன், ராணிப்பேட்டை- ஜி.வீரமணி, ஆற்காடு- என்.ஜனார்த்தனன், கீழ்பென்னாத்தூர்- பி.கே.எஸ்.கார்த்திகேயன், அம்பாசமுத்திரம் - ராணி ரஞ்சிதம், நாங்குநேரி - பரமசிவ ஐயப்பன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூட்டணிகளுக்கு 73 தொகுதிகள் ஒதுக்கியது போக அமமுக 161 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். இதில், சங்கரன்கோவில் உட்பட சில தொகுதிகளுக்கு இன்னும் அமமுக வேட்பாளர்களை அறிவிக்காததால் இன்று இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.
இதேபோல், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது, 20 ரூபாய் டோக்கன் கொடுத்து அவர் வெற்றிபெற்றதாக புகார் எழுந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஆர்.கே.நகர் தொகுதி பக்கம் செல்வதை தினகரன் தவிர்த்தார். இதனால், தினகரன் மேல் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனாலேயே, அவர் ஆர்.கே.நகர் தொகுதியை விட்டு கோவில்பட்டி தொகுதியில் களம் காண்கிறார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு பி.காளிதாசை அவர் வேட்பாளராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கரன்கோவில் (தனி)- ரா.அண்ணாதுரை. தென்காசி வடக்கு மாவட்டம் கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதிக்கு வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் மனோவா சாம் ஷாலன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கிள்ளியூர் (234) கி.சீமா கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அறிவிக்கப்படுகிறார்.