டெல்லி: பிரிட்டனில் இனவெறியால் இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவது குறித்து அந்நாட்டு அரசிடம் கேள்வி எழுப்பப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ராஷ்மி சமந் பதவி விலக்கியதற்கு இன பாகுபாடு மற்றும் இணையவழி தாக்குதலே காரணம் என்று புகார் எழுந்தது பற்றி பிரிட்டன் அரசிடம் விளக்கம் கோரப்படும் என்றார்.
காந்தி பிறந்த நாடான இந்தியா இதர நாடுகளில் நிகழும் இனவெறி தாக்குதலை நிச்சயம் எதிர்க்கும் என்றார். வளைகுடா நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பல முறை ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதித்த நேரத்திலும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் நாடுகளுக்கு தாம் பயணம் செய்ததாகவும் ஜெய்சங்கர் பேசியுள்ளார். அங்குள்ள இந்தியர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் விமானங்கள் தடை செய்யப்பட்ட சவுதி அரேபியா, குவைத் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.