கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வடபூண்டி கிராம வளைவு பாதையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி தனபால் தலைமையில் போலீஸ்காரர்கள் முருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வடபூண்டி கிராமத்தில் இருந்து ஒருவர் மொபட்டில் அதிவேகமாக வந்துள்ளார். போலீசாரை கண்டதும் மொபட்டை திருப்பி அதிவேகமாக சென்றுள்ளார். இதனால் பறக்கும் படையினர் விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர்.
விசாரணையில் கண்டாச்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(50) என்பதும் இவர் அந்த கிராமத்தில் கோழிக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மொத்தமாக 193 மதுபாட்டில்களை வாங்கி சென்று தனது கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 193 மதுபான பாட்டில் மற்றும் மொபட்டையும், மற்றும் கைது செய்யப்பட்ட ராஜேந்திரனையும் கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான காந்திடம் தேர்தல் பறக்கும்படையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது அதனையடுத்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குபதிவு செய்து மதுபானம் கடத்தி செல்லப்பட்ட ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.