திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் - மேல்நல்லாத்தூர் இடையே பீமன்தாங்கல் குட்டையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு முறையாக தூர்வாரி, கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த பீமன்தாங்கல் குட்டை உள்ளது. இந்த குளத்தை பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை யாரும் தூர்வார இல்லை. கரையை பலப்படுத்தவும் இல்லை. இக்குளத்தின் அருகே கடை வைத்திருக்கும் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுயநல பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அங்கு மணல்,ஜல்லி ஆகியவற்றை கொட்டி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அருகே உள்ள கடைக்காரர்களும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அரசு நீர்நிலையை தூர்வாரி கரை கட்டி நீர் தேக்கம் செய்வதன் மூலம் கிராமத்தின் நீர் வளமும் பெருகும். இது மட்டுமின்றி இதில் மீன் வளர்ப்பு செய்வதன் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கும். எனவே குட்டையை முறையாக தூர்வாரி, கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.