விருதுநகர்: விருதுநகர் அருகே மத்தாப்பு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலியாகினர். இதுதொடர்பாக போர்மென் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே சிவகாசி ரோட்டில் ஆமத்தூர் அருகே குருமூர்த்திநாயக்கன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த விசாகனுக்கு(2 8) சொந்தமான கலர் மத்தாப்பு பட்டாசு ஆலை உள்ளது. இங்கு நேற்று மாலை 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். 34வது அறையில் மத்தாப்பு தீக்குச்சிகளில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீப்பற்றிய அறையில் இருந்த தொழிலாளர்கள் குருமூர்த்திநாயக்கன்பட்டி வீராச்சாமி (55), பஞ்சவர்ணம், ஆமத்தூர் புதிய ராஜா (40), முத்துலிங்காபுரம் நடராஜன் (50) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் அறை முற்றிலும் சேதமடைந்தது. விபத்து பற்றி தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதிய ராஜா இறந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை நடராஜன், வீராச்சாமி ஆகியோர் பலியாகினர்.
விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் விசாகன், ஆலை போர்மேன் துரைராஜ் ஆகியோர் மீது கவனக்குறைவாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்தியது, கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் போர்மேன் துரைராஜ் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள விசாகனை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற 5 பட்டாசு ஆலை வெடி விபத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.