நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (25). ஐடிஐ முடித்து விட்டு சென்னையில் டிரைவராக பணியாற்றி வந்தார். அப்போது மணலியைச் சேர்ந்த கவிதா (23) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்படி கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராம்குமார் மனைவி, குழந்தையை தனது சொந்த ஊரான மயிலாடிக்கு அழைத்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை கிடைத்து ராம்குமார் மாலத்தீவுக்கு சென்று விட்டார். கவிதா வீட்டில் ராம்குமாரின் தாயார் இன்பராணி, ராம்குமாரின் இரண்டு சகோதரர்களுடன் வசித்து வந்தார். கவிதா, இன்பராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று கவிதா குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அவர் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருமகளை காப்பாற்றினார் இன்பராணி. தற்போது கவிதா ஆசாரிபள்ளம் அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கவிதாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவிதா கூறியதாவது: எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. இதன் காரணமாக எனக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும். இந்த நோயை குறிப்பிட்டு எனது கணவரின் தாயார் இன்பராணி (46) என்னை அடிக்கடி நீ இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறாய்.
செத்து தொலை. உன்னை காதலித்து கல்யாணம் செய்ததால் தான் எங்களுக்கு பிரச்சனை. நான் என் மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பேன் என்று அடிக்கடி சொல்லி வந்தார். இதனால் எனக்கு மன வேதனை ஏற்பட்டது. இந்த மனவேதனை காரணமாக நான் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு கவிதா கூறியதாக போலீசார் கூறினர். இது தொடர்பாக கவிதா அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கவிதாவின் மாமியார் இன்பராணி மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர்.