கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் கீதாவுக்கு மீண்டும் போட்டியிட அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் இவர் வேறு கட்சிக்கு போவார் என்று பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.இந்நிலையில் நேற்று கீதா அளித்த பேட்டி : நான் 1995லிருந்து அதிமுக உறுப்பினராக உள்ளேன். 2011 முதல் 2016 வரை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக இருந்தேன். அதன் பிறகு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றிப்பெற்று கடந்த 5 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தேன். இந்த தேர்தலிலும் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தேன். ஆனால் கடைசிவரை, எனக்கு சீட் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.
என் கணவர் மீது குற்றம் சுமத்தி எனக்கு சீட் மறுக்கப்பட்டுவிட்டது. இதுபோல் சீட் மறுக்கப்பட்டவர்கள் அனைவரின் சார்பாக எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறேன். பல்வேறு கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. நான், அமமுகவில் சேருவது பற்றி என்னுடைய ஆதரவாளர்கள், உறவினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி இரண்டே நாளில் முடிவை அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.