மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நடைபெறும் இந்த முகாம் 48 நாட்கள் குளிர்காலத்தில் துவங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி மாதம் முகாம் துவங்கியது. இந்நிலையில் முகாம் நடைபெறும் தேக்கம்பட்டி நெல்லிமலை அடிவார பகுதியில் நிலவும் கால சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து அறநிலையத்துறை, மருத்துவ குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முகாமில் உள்ள யானைகளை ஆய்வு செய்து, அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது: தேக்கம்பட்டி கிராமத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே வெப்பம் காரணமாக கோடை காலத்தில் வரக்கூடிய தொற்று நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது.
அதேபோல் எதிர்வரும் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நிலையில் யானைகளுக்கு வயிற்று உபாதைகள், கொப்பளங்கள், பாதப் புண் ஆகியவை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் 48 நாட்கள் நடைபெறும் முகாமை 30 நாட்களாக சுருக்கி மார்ச் 9ம் தேதியுடன் முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதை ஏற்காமல் இடையில் முகாமை நிறுத்தும் எண்ணம் இல்லை, 27ம் தேதி வரை நடத்துவது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவெடுத்து தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வெயில் காரணமாக யானைகள் குறைவான உணவையே எடுத்துக்கொள்கிறது. இதனால் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முகாமை உடனே முடித்துக்கொள்ள வேண்டும் என யானை ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.