தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத்துறை எந்த அளவிற்கு இறக்கத்தை சந்தித்து உள்ளது என்பது அத்துறையில் உள்ளவர்களுக்கு நன்கு புலப்படும். திறமையான விளையாட்டு வீரர்களை பயிற்சி கொடுத்து ஊக்கத் தொகை கொடுத்து அவர்களை வழிநடத்த செல்ல முடியாத நிலை தான் விளையாட்டு துறையில் உள்ளது. இவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்கள் அனுபவித்த துயரங்கள் ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 2018 தபால் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு விருப்ப மனு பெறப்பட்டு இதுவரை யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. மேலும் 2019ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான ஊக்கத்தகை இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படவில்லை.
திறமை அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலையை கொடுக்காமல் சிபாரிசு அடிப்படையில் விளையாட்டு வீரர்களின் வேலைகளை பூர்த்தி செய்வதால் திறமையான விளையாட்டு வீரர்கள் வேலைவாய்ப்பை இழந்து பரிதவிக்கின்றனர் தமிழகத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தொடங்கி மாநில அளவிலான போட்டிகள் வரை அனைத்திலும் சிபாரிசு கொடி கட்டிப்பறக்கிறது. விளையாட்டுத்துறையில் திறமைக்கு முக்கியத்துவம் தரும் அசாம் மாநிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழகம் அதலபாதாளத்தில் உள்ளது. எனவே விளையாட்டு துறையை அதல பாதாளத்திற்கு தள்ளிய இந்த அரசுக்கு வருகின்ற தேர்தலில் பொது மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.