சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு-காஞ்சிபுரம்- அரக்கோணம் வழியாக இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் நாளை முதல் 19ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்ககை: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரத்திற்கு தினமும் 100க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே 3வது ரயில்பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெறவுள்ளதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் புறநகர் சிறப்பு ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம், தடையில்லா சேவை வழங்கிட புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை வரும் 14ம் தேதி முதல் 19ம் தேதி 6 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும் இவ்வாறு தெரிவிக்கபப்ட்டுள்ளது.