ஸ்வீடன் : ஸ்வீடன் நாட்டில் இயங்கிவரும் வி-டெம் இன்ஸ்டிட்யூட் சமீபத்தில் `ஜனநாயக அறிக்கை-2021 என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியா எதேச்சதிகாரத்தை நோக்கி பயணிப்பதாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் வி-டெம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஊடகங்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் சுதந்திரம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இது இந்தியா எதேச்சதிகார செயல்முறையில் பயணிக்கிறது என்பதைக் காட்டுகிறது. மோடிக்கு அரசுக்கு முன்னர் இருந்த அரசாங்கம் தணிக்கை செய்வதை அரிதாகவே பயன்படுத்தியது.
ஆனால், இப்போது இந்திய அரசு பாகிஸ்தானைப் போலவே எதேச்சதிகாரமாகவும், அதன் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளத்தை விட மோசமானதாகவும் உள்ளது. மேலும், இப்போது உள்ள இந்திய அரசு 2019ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் UAPA சட்டம் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
அத்துடன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற அந்தஸ்திலிருந்து தேர்தல் எதேச்சதிகாரம் என்ற அந்தஸ்திற்குத் தரம் குறைத்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த அறிக்கை, தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, இந்தியா இனி ஜனநாயக நாடக இருக்காது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.