×

டெல்லி கோட்டையில் குஷ்புவுக்கு இடமா?... தேர்தலில் போட்டியிடுவதாக நான் எப்போதும் கூறவில்லை: குஷ்பு பேட்டி

சென்னை: தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து குஷ்பூவிடன் கேள்வி எழுப்பும் போது வானதி சீனிவாசன் இந்த கருத்தை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜ பக்கம் தாவிய குஷ்பு சில நிபந்தனைகளுடன் தான் இணைந்ததாக பேச்சு அடிபட்டது. முக்கிய பொறுப்பு அல்லது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்பது தான் அந்த நிபந்தனையாம். அதற்கான உத்தரவாதம் கிடைத்த பின்பே பாஜவில் இணைந்தார் என்ற தகவல்கள் வந்தன. அவரது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக பாஜ தலைமையும் உறுதி அளித்திருந்தது.

இதை எதிர்பார்த்து, சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதியை குறிவைத்து களம் இறங்கினார். கடந்த 10 நாட்களாக இந்த தொகுதியில் தெரு தெருவாக பிரசாரத்திலும் ஈடுபட்டார். தொகுதியே ஒதுக்காத நிலையில் குஷ்புவின் அலப்பறையை கண்டு பாஜவினரே அதிர்ச்சி அடைந்தனராம். கண்டெய்னரில் தேர்தல் அலுவலகம் என்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் என்றும் பல லட்சங்களை வாரி இறைத்து வந்தாராம். பாஜவில் குஷ்புக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் வரப்போகும் தேர்தலில் குஷ்புக்கு சீட் தரப்படும் என்றும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதி ஒதுக்க வாய்ப்புள்ளது என்ற தகவலும் வெளியானது.

இந்த உற்சாகத்தில் தான் குஷ்பு தேர்தல் களத்தில் குதித்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் பாஜவுக்கான தொகுதிகளை நேற்று அதிமுக வெளியிட்டது. அதில் குஷ்பு ஆவலோடு காத்திருந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியே இல்லை. அதை பாமகவுக்கு ஒதுக்கி விட்டனர். பாஜ தலைவர் எல்.முருகன் அவருக்காக முட்டி மோதியும் இந்த தொகுதியை கேட்டு பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக மயிலாப்பூர் தொகுதியை கேட்டுள்ளனர். அதையும் அதிமுக தர முடியாது என்று கூறிவிட்டதாக தெரகிறது. இதனால் குஷ்பு மிகவும் ஏமாந்து போயிருப்பதாக கூறப்படுகிறது.

சீட் கிடைத்து விட்டதாகவே நினைத்து தொகுதி முழுவதும் சுற்றி வந்த அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் பாஜ தலைமை மீது குஷ்பு கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு; தேர்தலில் போட்டியிடுவதாக நான் எப்போதும் கூறவில்லை. தேர்தல் பொறுப்பாளராக நான் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் சேப்பாக்கம்/ திருவல்லிக்கேணி தொகுதியில் செய்திருக்கிறேன். எனக்குத் தேர்தலில் போட்டியிட சீட் என்ற நம்பிக்கையில் நான் கட்சிக்கு வரவில்லை. கட்சி மீது நம்பிக்கை வைத்துத்தான் பாஜகவுக்கு வந்திருக்கிறேன். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெல்லும் என தெரிவித்தார்.

இதற்கிடையே உடனே குறுக்கிட்டு பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் 5 சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கும் குஷ்புவை அழைக்கிறோம். யார் சொன்னது குஷ்புவுக்கு வாய்ப்பில்லை என்று. யாருக்கு என்ன பொறுப்பு என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும். பொறுமையாக இருங்கள். யாருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என கட்சிக்கு தெரியும் எனக் கூறினார்.

Tags : Khushbu ,Delhi Fort , Is there a place for Khushbu in Delhi Fort? ... I never said I would contest the election: Khushbu interview
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...