சின்னாளபட்டி : செம்பட்டியில் தரைப்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செம்பட்டி ரவுண்டானா அருகே ஒட்டன்சத்திரம் சாலை செல்லும் வழியில் உள்ள ஓட்டல்கள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கியிருந்தன. இதுகுறித்து பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து தற்போது கழிவுநீர் தேக்கத்தை தடுக்கும் வகையில் செம்பட்டி- ஒட்டன்சத்திரம் சாலையில் வடிகால் வாய்க்காலுடன் தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் தற்போது செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் ரவுண்டானா அருகே (சிக்னல்) தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பால பணி மிகவும் தாமதமாக நடந்து வருவதால் பகல், இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக தேனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள், மதுரையில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.