புதுச்சேரி: புதுச்சேரி காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த சாராய வியாபாரி ராமு (எ) ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2013ல் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு 2 மனைவிகள். அதில் ஒருவர்தான் எழிலரசி. இந்த கொலைக்கு அப்போதைய சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் காரணம் என்று எழிலரசி குற்றம்சாட்டி வந்தார். இந்த முன்விரோதம் காரணமாக வி.எம்.சி. சிவக்குமாரை 2017ல் கூலிப் படையினரை வைத்து எழிலரசி கொலை செய்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையானார். இவர் மீது 3 கொலைகள், கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உட்பட 14 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஒரு வழக்கில் டி.ஆர். பட்டினம் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில், பா.ஜ.க. தலைவர் சாமிநாதனை சந்தித்து பா.ஜ.க.வில் எழிலரசி ஐக்கியமானார். தற்போதைய சட்டமன்ற தேர்தலில் டி.ஆர்.பட்டினம் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. இத்தொகுதியில் எழிலரசிபோட்டியிடுவார் என கூறி அவரது ஆதரவாளர்கள், டி.ஆர்.பட்டினத்தில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். வீடு வீடாக சென்று தங்களுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். போலீசார் தேடி வரும் வேளையில், பா.ஜ.க. சார்பாக பெண் தாதா எழிரசி பிரசாரம் செய்து வருவது புதுச்சேரி அரசியலில் பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.