×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தம்பிதுரை ஆதரவாளர்கள் புறக்கணிப்பு: கே.பி.முனுசாமி கை மீண்டும் ஓங்கியது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஊத்தங்கரை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக ராஜேந்திரன் இருந்து வருகின்றனர். மற்ற 4 தொகுதிகளிலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில், மனோரஞ்சிதம் நாகராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 2 பேருக்கும் சீட் வழங்கப்படவில்லை. மனோரஞ்சிதம் நாகராஜ் கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய 2 முறையும் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

கே.பி.முனுசாமியின் தீவிர ஆதரவாளரான இவர், கட்சியில் பிரச்னை ஏற்பட்ட போதும், ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி பக்கமாக நின்றார். இதனால் இந்த முறையும் தனக்குத்தான் சீட் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக தமிழ்செல்வம் என்பவருக்கு ஊத்தங்கரை தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இவரும் கே.பி.முனுசாமியின் ஆதரவாளர் தான். அதேபோல், பர்கூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. ராஜேந்திரனுக்கும் சீட் வழங்கவில்லை. அவர் தம்பிதுரையின் ஆதரவாளர் ஆவார். இந்த முறை பர்கூர் தொகுதி கே.பி.முனுசாமியின் ஆதரவாளரான காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் நிற்கிறார். அவர் கே.பி.முனுசாமியின் தீவிர விசுவாசி ஆவார். கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு கிருஷ்ணகிரி தொகுதி ஒதுக்கப்படுவதாக இருந்தது. அந்த தொகுதியை தனது சிஷ்யரான அசோக்குமாருக்கு வழங்குமாறு கூறிவிட்டு, கே.பி.முனுசாமி தொகுதி மாறிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வரும் அவர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஓசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ணரெட்டி நிற்கிறார். அவரும் கே.பி.முனுசாமியின் ஆதரவாளர்தான். இந்த தேர்தலில் தம்பிதுரை ஆதரவாளர்கள், விசுவாசிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு கே.பி.முனுசாமியின் கை மீண்டும் ஓங்கி உள்ளது. இதனால், தம்பிதுரை ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Thambidurai ,Krishnagiri district ,KP ,Munuswamy , Thambidurai supporters boycott in Krishnagiri district: KP Munuswamy's hand raised again
× RELATED கிருஷ்ணகிரி அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை