மியான்மரில் குழந்தைகளை தாக்கவேண்டாம் என்று கூறி கன்னியாஸ்திரி ஒருவர் போலீசார் முன் மண்டியிட்ட சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது. மியான்மரில் கடந்த மாதம் 1ம் தேதி ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. முக்கிய நகரங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த போராட்டம் தற்போது வன்முறைப் போராட்டமாக மாறி 50 உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மியான்மரில் நடக்கும் சில வன்முறை செயல்கள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. கன்னியாஸ்திரி ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நு, போலீசாரிடம் மண்டியிட்டு கைகூப்பி குழந்தைகளுக்கு எதிராகவும், குடியிருப்பு வாசிகளுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள். என கெஞ்சி வேண்டுவதாக அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.
ஆனால் அவர் மண்டியிட்டு வேண்டுக்கொண்ட அடுத்த சில மணிகளில் துப்பாக்கிச் சத்தம் வெடிக்கத் தொடங்கியதாகவும், அந்த இடம் ரத்தம் படிந்துவிட்டதாகவும் கன்னியாஸ்திரி தெரிவித்தார். ராணுவத்தினரின் அத்துமீறலால் மியான்மரில் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இது மனித உரிமை மீறல் எனக் கூறப்படும் அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு வன்முறையை தடுக்கவேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.