பாங்காக்: தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக கோபமடைந்த அந்நாட்டு பிரதமர் செய்தியாளர்கள் மீது சானிடைசர் கொண்டு ஸ்பிரே அடித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அந்நாட்டில் ராணுவ புரட்சியின்போது அரசுக்கு எதிராக அமைச்சர்கள் 3 பேர் போர்க்கொடி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கில் 3 அமைச்சர்களுக்கும் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இந்த 3 அமைச்சர்களையும் நீக்கி பிரதமர் பிரயுத் சான் ஓச்சா அமைச்சரவையை மாற்றி அமைத்தார்.
இந்நிலையில், தாய்லாந்தில் வழக்கமான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், 3 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து அமைச்சரவை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு கோபமடைந்த அவர், திடீரென மேஜை மீது வைக்கப்பட்டிருந்த சானிடைசரை எடுத்துக்கொண்டு செய்தியாளர்களை நோக்கி வந்தார். பின்னர் அமர்ந்திருந்த செய்தியாளர்கள் ஒவ்வொருவர் மீதும் சானிடைசரை தெளித்தார். இச்சம்பவம் அங்கிருந்த செய்தியாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.