இந்தியாவின் விவசாய சட்டங்கள் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டதற்காக, அந்நாட்டு தூதரை அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லையில் கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வேளாண் சட்டங்கள் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் விவாதம் நடத்தப்பட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரை வெளியுறவு அமைச்சக செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா நேற்று நேரில் அழைத்து, அரசின் கண்டனத்தை பதிவு செய்தார். வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சக ஜனநாயக நாட்டில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை பற்றி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது; அவசியமற்றதும் கூட. உண்ைம சம்பவங்களை தவறாக சித்தரித்து, பிரிட்டன் எம்பி.க்கள் ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடக் கூடாது. இதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள், இருதரப்பு உறவை பாதிக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது.