கடலூர்: சாணக்கியனாக இருந்தது போதும், இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது என்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கூட்டத்தில் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். பண்ருட்டியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், அதிமுகவிற்கு தான் இனி இறங்குமுகம். அதிமுகவின் தலைமைதான் சரி இல்லை. நாங்கள் கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம். யாருக்கும் தேமுதிகவினர் சளைத்தவர்கள் அல்ல என ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தோல்வி அடைவார். அவரது சொந்த தொகுதியிலேயே பழனிசாமி மண்ணை கவ்வுவார். சாதியை பற்றி எனக்கு தெரியாது. சாதியைப்பற்றி பேசுவதில் நான் முட்டாளாகவே இருப்பேன். எனக்கு தெரிந்த ஒரே சாதி தேமுதிகதான், ஒரே மதம் கேப்டன்தான்.தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் இருந்த போதே தனித்து களம் கண்டிருக்கிறோம்.தமிழகத்தில் ஊழல் செய்யாத ஒரே கட்சி தேமுதிகதான்.திமுக ஆட்சிக்கு வந்தால் சந்தோஷமே. மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி வைக்க மாட்டோம். அரசியலில் நாங்கள்தான் சீனியர் அதனால் தெய்வத்துடன் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி; தனித்தே 234 தொகுதியிலும் போட்டியிடுவோம் என்றார். விஜய பிரபாகரனின் இந்த பேச்சு அதிமுகவினரை கொதித்தெழச் செய்துள்ளது.