பாபநாசம் : ராஜகிரி பயணிகள் நிழற்குடை நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ராஜகிரி ஊராட்சியும் ஒன்றாகும். இந்த ஊரில் 2012-13ல் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற் குடை கட்டப்பட்டது.
ஆனால் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் செல்லும் எந்த அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் அங்கு நிற்பதில்லை. ஏன் மினி பேருந்துகள் கூட நிற்பதில்லை. தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் ராஜகிரி, சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பயணிகள் சாலையில் நின்றுத்தான் பஸ் ஏறுகின்றனர்.
வெயில் காலமென்றால் கூட பரவாயில்லை. மழைக்காலத்தில் மழையில் ஒதுங்க இடமின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர். வயது முதிர்ந்த பயணிகள், பெண்கள் நலன் கருதி இந்தப் பேருந்து நிழற் குடையில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.