சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயல் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டியளித்தார். தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என்று தெரிந்து பழனிசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவர்கள் அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பே இல்லை என கூறினார். கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம், மக்களை ஏமாற்றி வெற்றி பெற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என கூறினார். கேஸ் விலையை குறைக்க முடியாத முதல்வர் பழனிசாமி இலவச சிலிண்டர் வழங்குவதாக கூறியுள்ளார் என விமர்சனம் செய்தார். முதியவர் உதவித்தொகையையே சரியாக கொடுக்க முடியாத அதிமுக அரசால் எப்படி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1500 வழங்குவார் என கேள்வி எழுப்பினார்.
இது குறிப்பாக மக்களை ஏமாற்றுவதற்காக செய்யும் செயல் என கூறினார். சென்னையில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவில் விருப்பமனு அளித்தவர்களுக்கு 2வது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன் என கூறினார். உண்மையான தர்மயுத்ததை நாங்கள் தொடங்கியிருக்கிறோம் என பேட்டியளித்தார். கட்சியில் இருந்து வெளியேறுவதாக சசிகலா அறிவித்தது குறித்து பேச விரும்பவில்லை என கூறினார்.