சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி கொரோனா தொற்று 500க்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை, தி.நகர் பகுதியில் உள்ள தெருக்களில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகர நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். ஆய்வின்போது முகக்கவசம் அணியாத மக்களுக்கு 200 அபராதம் விதித்தார். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடி அபராதம் வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :
சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரங்களுக்கு முன்பாக பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதில் நெகடிவ் என்றால் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், லண்டன் பயணிகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும். ஏதேனும் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். சென்னையில் கோவிட் கண்காணிப்பு மையங்களில் 4ஆயிரம் படுக்கை தயார் நிலையில் உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்க கூடாது என்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது. இதனால் மக்கள் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.