நெல்லை : மேலப்பாளையம் பொது பாதைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சிறுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. மேலப்பாளையம் புதுமனை குத்பா பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியினர், முஹல்லாக்களின் பைத்துல்மாக்கள் சார்பில் சிறுவர், சிறுமிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மேலப்பாளையத்தில் நேற்று நடந்தது. இப்பேரணியை குத்பா பள்ளிவாசல் நிர்வாகக்குழுத் தலைவர் அப்துல்காதர் மற்றும் நிர்வாகிகள் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.
இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட திரளானோர் தெருக்களில் பொதுப்பாதைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ, தீயணைப்பு வாகனம், இறந்தவர்களை கொண்டுசெல்லும் வாகனம் போன்றவற்றை கொண்டுசெல்வதில் சிரமம் அதிகரித்துவருகிறது. எனவே தெருப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலப்பாளையம் ஈத்கா திடலில் துவங்கிய இப்பேரணி முக்கிய சாலைகள் வழியாக பஜார் திடலில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து ஜனாப் ரிபாயி ரஷாதி நிறைவுரையாற்றினார். ஏற்பாடுகைள குத்பா பள்ளி முஹல்லா, பைத்துல்மால்கள், விகேஎஸ், கியூஎம்எஸ், எம்ஏபிஎஸ் மற்றும் ஸத்கா நண்பர்கள், பைத்துல்லா உறுப்பினர்கள் செய்திருந்தனர்.