பாணாவரம் : ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம்- பழையபாளையம் தார் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. சாலை போடப்பட்ட சில மாதங்களிலேயே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிப்போனது. இச்சாலையை அதிகமாக, போளிப்பாக்கம், கன்னிகாபுரம், தாங்கல், இலங்கைத் தமிழர் முகாம் மற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், ஒட்டுமொத்த சாலையும் குண்டும், குழியுமாக, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சிதைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் அவசரத்திற்கு சிகிச்சைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சாலை முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதும், வாகனங்கள் பழுதாவதும் வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலையை சீரமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.