திருவண்ணாமலை : திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் வாக்காளர்களுக்கு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அறிவியல் பூங்காவில், வரும் சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடந்தது.
அதில், டிஆர்ஓ முத்துகுமாரசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, துணை ஆட்சியர்(பயிற்சி) அஜிதாபேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்கும் வழிமுறைகள் குறித்த செயல்விளக்கம் செய்துகாட்டப்பட்டது.
முதல் முறை வாக்காளர்கள், மாதிரி வாக்குப்பதிவில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து பார்த்தனர்.மேலும், செல்பி புகைப்பட வாக்குச்சாவடியை திறந்து வைத்து, இளம் வாக்காளர்களுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி செல்பி எடுத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அறிவியல் பூங்கா திறந்தவெளி அரங்கத்தில் தேர்தல் விழிப்புணர்வு சிலம்பாட்டம், பள்ளி மாணவர்களின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.