சென்னை: திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் உள்ள அன்பழகன் வீட்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அன்பழகன் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதன்பிறகு தனது முகநூல் பதிவில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: திராவிட கருத்தியல் பாதையில் நம்மை வழிநடத்தும் பேராசிரியர் அன்பழகனின் முதலாமாண்டு நினைவேந்தல். தலைவர் கலைஞர் தலைமையிலான திமுகவை காப்பது ஒன்றே தன் கடமை எனக் கருதி, கழகத்தில் தன்னைவிட இளையோர் அனைவருக்கும் திராவிட வகுப்பெடுத்துக் கொள்கை உணர்வினை ஊட்டியவர் நம் பேராசிரியர் அன்பழகன்.
குடும்ப பாசம் மிகுந்த இயக்கமான திமுகவில் தலைவர் கலைஞரிடம் எந்தளவுக்கு இயக்க பயிற்சி பெற்றேனோ அதே அளவுக்கு, ‘பெரியப்பா’ பேராசிரியரிடமும் பயிற்சியினை பெற்றேன். அந்தப் பயிற்சிதான் இன்று திமுக எனும் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும் பொறுப்பைச் சுமந்து பயணிப்பதற்கு உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது. தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளி மாணவராக, பேரறிஞர் அண்ணாவின் இதயம் நிறைந்த அன்புத் தம்பியாக, தலைவர் கலைஞருக்கு தோள்கொடுத்து நின்ற கொள்கைத் தோழராக, இயக்கக் கருத்தியலின் தலைவராகத் தன் வாழ்நாள் முழுவதும் திராவிடம் பரப்பிய, பாடுபட்ட பேராசிரியர் அன்பழகனின் முதலாமாண்டு நினைவு நாளில், அவர் கற்றுத் தந்த தத்துவப் பாடங்களை நெஞ்சில் ஏந்தி, மதவாத பிற்போக்கு அடிமை சக்திகளை முறியடித்து, மதநல்லிணக்க சுயமரியாதை மிக்க சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு அயராது பாடுபட உறுதியேற்போம். இவ்வாறு கூறியுள்ளார்.