தமிழகத்தில் சோழிங்கநல்லூர் தொகுதிதான் பெரிய தொகுதியாகும். இங்கு மட்டும் 6,94,845 வாக்காளர்கள் உள்ளனர். அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சென்னையை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் தற்போது தென்சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள கே.பி.கந்தனும் களத்தில் உள்ளார். இவர் ஏற்கனவே சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு 2011ம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளார். அதனால் தனக்கு மீண்டும் சீட் வழங்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். எப்படியும் தனக்கு சீட் கிடைத்துவிடும் என்று பல கோடி ரூபாயை செலவு செய்து ஜெயலலிதா, எம்ஜிஆர் பிறந்த நாளன்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதேபோன்று வேறு சிலரும் சீட்டுக்கான போட்டியில் உள்ளனர்.