திருவனந்தபுரம்: சபரிமலையில் மேல்சாந்தி கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் முடிந்த நிலையில், நடை சாத்தப்பட்டது. மீண்டும் பங்குனி மாத பூஜைகளுக்காக 13ம் தேதி நடை திறக்கப்படுகிறது. பக்தர்கள் வருகை இல்லாததால் சபரிமலையில் புலிகள் உட்பட வன விலங்குகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சபரிமலை மற்றும் மாளிகைப்புற மேல்சாந்திகள் ஐப்பசி மாதம் தேர்ந்தெடுக்கப்படுவர். கார்த்திகை 1ம் தேதி இருவரும் பொறுப்பேற்பர். அதன்பிறகு மண்டல பூஜைக்கு நடை திறக்கும் வரை அவர்கள் சபரிமலையை விட்டு எங்கும் செல்லக் கூடாது. அங்ேகயே தங்கி இருந்து பூஜைகளை நடத்திட வேண்டும்.
இந்நிலையில், சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ், மாளிகைப்புறம் மேல்சாந்தி ரெஜிகுமார் ஜெனார்த்தனன் நம்பூதிரி ஆகியோர் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ் கூறுகையில், ‘‘பூஜை இடைவேளையில் யோகா செய்தல், சமஸ்கிருதம் படித்தல் உட்பட பொழுது போக்குகளில் நாங்கள் ஈடுபடுகிறோம். வழக்கமாக காலை, மாலையில் நடைபயிற்சி ெசய்வது உண்டு. ஆனால், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் புலி வந்ததால், நாங்கள் நடைபயிற்சிக்கு செல்லவில்லை. இதனால், ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் விளையாடினோம். இதை ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்,’’ என்றார்.