ஊட்டி : ஊட்டி தேயிலை பூங்காவில் 20,000 அலங்கார செடிகளை கொண்டு இந்தியா வரைபடம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டாவில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான தேயிலை பூங்கா உள்ளது. இங்கு தேயிலைத் தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் மலர் செடிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கின்றனர்.இப் பூங்காவில், புதிதாக 20 ஆயிரம் அலங்கார செடிகளை கொண்டு இந்தியா வரைபடம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. கோடை சீசனின் போது இவ்விரு அலங்காரமும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.