நெல்லை : நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் அருகே விடுபட்ட சாலை விரிவாக்க பணிகள் தொடங்கின.நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் மேல் புதிய பாலம் கட்டப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த பாலம் திறக்கப்பட்டது. இதையடுத்து நெல்லை - பாளை இடையே தாமிரபரணி ஆற்றை கடக்க பழைய மற்றும் புதிய பாலங்கள் ஒருவழிப் பாதையாக பயன்படுத்தப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது.
இதற்கிடையில் தேவர் சிலை அருகே பாலம் ெதாடங்கும் இடத்தில் ஏற்கனவே பழைய பாலத்தையொட்டி இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அவற்றை அகற்றிவிட்டு அப்பகுதியை பாலம் வரை விரிவுபடுத்தும் பணி தொடங்கின. இரும்பு தடுப்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
அதன் கீழுள்ள சிறிய அளவிலான தடுப்புச்சுவர் விரைவில் அகற்றப்பட்டு அந்த பகுதி சமப்படுத்தப்பட உள்ளது. இதேபகுதியில் பாலம் தொடங்கும் இடத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் ஏற்கனவே இடித்து அகற்றப்பட்டன. அங்கு சாலை விரிவாக்கப்பணி இன்னும் நடைபெறவில்லை.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, இடிக்கப்பட்ட பகுதியில் தற்காலிகமாக சாலை விரிவாக்கம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிந்த பின்னர் அடுத்த நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு பெற்று சாலை தரமாக அகலப்படுத்தி தடுப்புச்சுவர் மற்றும் பஸ்நிறுத்தம் அமைப்பதற்கு அரசு அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.