கடையம் : கடையம் அருகே பொட்டல்புதூரில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதுடன் அதனால் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, கடையம் மெயின் ரோடு வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொட்டல்புதூர் மேல பஸ் நிறுத்தம் அருகே முக்கூடல் செல்லும் சாலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக கழிவுநீர் ஓடையில் கலக்கிறது. மேலும் கோடை காலத்தில் குடிநீர் வீணாக செல்வது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் அபாய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் அபாய பள்ளத்தால் காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதுடன், பள்ளத்தையும் மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.